அமைச்சரின் நடவடிக்கைகளில் தலையிடவேண்டாம்- – பிரபல சட்டத்தரணிக்கு தொலைபேசி மிரட்டல்

39 0
image

அமைச்சரின் நடவடிக்கைளில் தலையிடவேண்டாம் என பிரபல மனித உரிமை சட்டத்தரணியொருவருக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மனித உரிமை சட்டத்தரணி பிரியலால் சிறிசேனவை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட நபர் ஒருவர் அமைச்சரின் நடவடிக்கைகளில் தலையிடவேண்டாம் என்று எச்சரித்துள்ளார்.

சட்டத்தரணி பிரியலால் அந்த நபர் யார் அவர் குறிப்பிட்ட அமைச்சர் யார் என்பதை அறிவதற்கு முயற்சிகளை மேற்கொண்டபோதிலும் உரியபதில் கிடைக்கவில்லை.

வெளிநாட்டு தொலைபேசி இலக்கத்திலிருந்தே சட்டத்தரணி சிறிசேனவிற்கு குறிப்பிட்ட தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

இது குறித்து சிறிசேன குருநாகல் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அதிகம் நடனமாடவேண்டாம் அமைச்சருக்கு எதிரான உங்கள் செயற்பாடுகளை விலக்கிக்கொள்ளுங்கள் நீங்கள் வீதியில் நடமாடவேண்டும் என்பதை மறக்கவேண்டாம் என தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட நபர் சட்டத்தரணிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

16 வருடங்களாக சட்டத்தரணியாக பணிபுரிகின்ற பிரியலால் சிறிசேன  மனித உரிமை செயற்பாட்டாளராகவும் விளங்குகின்றார்,2018 ம் ஆண்டின் பயங்கரவாத தடைசட்டத்தை எதிர்த்த இவர் பொலிஸாருக்கு எதிராக நீதிமன்றில் பல மனுக்களை தாக்கல் செய்துள்ளார்

2016 இல் பொலிஸாரால் கணவர் கொலை செய்யப்பட்ட பெண் ஒருவர் சார்பில் சிறிசேன நீதிமன்றில்  ஆஜராகியிருந்தார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வுகளிலும் அவர் கலந்துகொண்டிருந்தார்.