நாகமலை புதுக்கோட்டையில் திருமணம் முடிந்த கையோடு தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை சீராக புகுந்த வீட்டுக்கு மணமகள் அழைத்துச் சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டையைச் சேர்ந்த சிவப்பிரியா என்பவருக்கும், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த ராஜபாண்டி என்பவருக்கும் நேற்று (22) மதுரை திருப்பரங்குன்றம் தாலுகா நாகமலை புதுக்கோட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் குடும்பத்தினர் முன்னிலையில் வெகு விமர்சையாக திருமணம் நடைபெற்றது.
மணமகள் சிவப்பிரியா பொதுப்பணித் துறையில் பணியாற்றி வருவதோடு, தமிழர் பாரம்பரியம் மாறாமல் ஜல்லிக்கட்டு காளையையும் வளர்த்து வந்துள்ளார்.
நேற்று திருமணம் முடிந்த கையோடு திருமண சீருடன், தான் வளர்த்துவந்த ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
முன்னதாக, ஜல்லிக்கட்டு காளையை மணமேடையில் ஏற்றி மணமகனுக்கு அறிமுகம் செய்தார். தொடர்ந்து மணமகனும் மணமகளும் ஜல்லிக்கட்டு காளைக்கு முத்தமிட்டு புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் சமீபத்தில் வெற்றி கிடைத்துள்ள சூழலில், பாரம்பரியம் மாறாமல் தான் வளர்த்த காளையை புகுந்த வீட்டுக்கு மணமகள் கூட்டிச் சென்றுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

