பெருந்தோட்டங்களில் குடியிருக்கும் மக்கள் மீதான அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும்

106 0

பெருந்தோட்டங்களில் குடியிருக்கும் மக்கள் மீதான அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும் என நாவலப்பிட்டி பரனகல தோட்டத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில்,

பெருந்தோட்ட பகுதிகளில் வாழ்கின்ற மக்களின் பிரச்சினைகள் நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

தோட்டங்களினது நிர்வாகம் கடுமையான நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் அமுல்படுத்தி வருகிறது.

இவ்வாறான சூழ்நிலையில் மக்கள் பல்வேறு அச்சுறுத்தல்களுக்குள்ளாகி வருகின்றனர். தோட்டங்களில் குடியிருக்கும் மக்கள் மீதான அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் நிறுத்தப்பட வேண்டும்.

கடந்த இரு தசாப்த காலங்களில் பெருந்தோட்ட பகுதிகளின் நிலைமை மிக வேகமாக மாற்றமடைந்து வருகிறது.

தோட்டங்களில் குடியிருப்பவர்களில் ஒரு சிலரே தோட்டத் தொழிலாளர்களாக உள்ளனர்.

பெரும்பாலானவர்கள் தோட்டங்களில் குடியிருந்தாலும், அவர்கள் தோட்டத் தொழிலாளர்களாக இல்லை.

இவ்வாறான நிலையில் தோட்ட நிர்வாகத்துக்கும், தோட்டத்தில் குடியிருப்பவர்களுக்கும் இடையில் தொடர்ச்சியான முறுகல் நிலை காணப்படுகின்றது. இவை பல தோட்டங்களில் மோதல்களாக, கலவரங்களாக ஏற்பட்டிருந்தது.

இன்று நாவலப்பிட்டி பரனகல தோட்டத்தில் குடியிருக்கும், தோட்டத்தில் வேலை செய்யாத குடும்பங்களை லயன் குடியிருப்புகளில் இருந்து அகற்றுவோம் என தோட்ட நிர்வாகம் அச்சுறுத்தி இருக்கின்றது. அங்கே குடியிருப்பவர்களிடம் அடாவடித்தனமாக நடந்துகொண்டிருக்கின்றனர்.

அதன் பின்னர், தமது அதிகாரத்தை பயன்படுத்தி பொலிஸ் முறைப்பாடு ஊடாக ஓய்வுபெற்ற தொழிலாளி ஒருவரை கைதுசெய்திருக்கின்றனர். இவை மக்களிடையில் பாரிய அச்சுறுத்தலை, தமது எதிர்காலம் தொடர்பான பாதுகாப்பற்ற நிலையை  தோற்றுவித்திருக்கிறது.

தோட்டங்களில் குடியிருக்கும் மக்களின் பாதுகாப்பு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தோட்ட நிர்வாகங்களின் அத்துமீறிய செயற்பாடுகள் நிறுத்தப்பட வேண்டும். அது தொடர்பாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.