ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்களுக்கு ரஷ்யா தடை

92 0

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு பதிலடியாக முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட 500 பேருக்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.

2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதில் அமெரிக்கா கூடுதலான பொருளாதாரத் தடைகளை ரஷ்யா மீது விதித்தது. மேலும், ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கலந்துகொள்ள ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு விசா வழங்க அமெரிக்கா சமீபத்தில் மறுத்தது. இந்த நிலையில்தான் ரஷ்யாவின் இந்தத் தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது குறித்து ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ”அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா உட்பட 500 அமெரிக்கர்களுக்கு ரஷ்யாவினுள் நுழைய தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிகையாளர் இவான் கெர்ஷ்கோவிச் ரஷ்யாவில் உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் கடந்த மார்ச் மாதம் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கைது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவை அமெரிக்க தூதரகம் அணுகியது. ஆனால், அமெரிக்காவின் இந்த கோரிக்கையை மறுப்பதாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சகம் தற்போது தெரிவித்துள்ளது.ஜி7 கூட்டமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமாவில் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் ஜப்பான் சென்றுள்ளனர். ஜி 7 உச்சி மாநாட்டில், முக்கிய நிகழ்வாக வரும் ஞாயிற்றுக்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேரடியாக கலந்து கொள்கிறார். இதனை உக்ரைன் அரசு உறுதிப்படுத்தியுள்ளது. ஜெலன்ஸ்கி கலந்துகொள்வதன் மூலம், ஜி 7 உச்சி மாநாட்டில் ரஷ்யா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.