கட்டையர் குளம் காடழிப்பு தொடர்பில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மாவட்ட செயலாளர் கோரிக்கை

91 0

வுனியா, கட்டையர் குளம் பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடிதம் மூலம் வவுனியா மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா, கட்டையர் குளம் பகுதியில் வன இலாகாவுக்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் வரையிலான காடு கிராம அலுவலர் ஒருவரின் ஆதரவுடன் அழிக்கப்பட்டிருந்தது.

இந்த செயற்பாட்டினை கட்டையர்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் தடுத்து நிறுத்தியது.

அதன் பின்னர், அச்சங்கத்தில் முன்னின்று செயற்பட்ட பாடசாலை ஆசிரியரொருவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் போலி முகநூலொன்றில் ஒரு பதிவு இடப்பட்டிருந்தது.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் கொழும்பு சிஐடி மற்றும் வவுனியா சைபர் க்ரைம் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.=

அந்த முறைப்பாட்டையடுத்து, குறித்த கிராம அலுவலரை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்தியபோதே, கிராம அலுவலர் தான் அந்த முகநூல் பதிவினை இட்டிருந்தார் என்பது தெரியவந்தது.

அதனையடுத்து, போலி முகநூலில் இடப்பட்டிருந்த அப்பதிவினை பொலிஸார் தமது தொழில்நுட்ப பிரிவினூடாக அழித்தனர்.

இதன் தொடர்ச்சியாக கட்டையர் குளம் கிராம அபிவிருத்தி சங்கம் காடழிப்பு குறித்து அளித்திருந்த முறைப்பாடு தொடர்பில் உடன் விசாரணைகளை முன்னெடுத்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசனிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் கடிதம் அனுப்பியுள்ளார்.

இதேவேளை, அண்மைக்காலமாக பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சில கிராம அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு பிரதேச செயலகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.