யாழில் உணவகம் ஒன்றிற்கு சீல்

69 0

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தி சந்திக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய யாழ்.மாநகர சபை பொது சுகாதார பிரிவினரால் , சீல் வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடையில் வியாழக்கிழமை வாங்கிய கொத்து ரொட்டியினுள் பழுதடைந்த இறைச்சி காணப்பட்டதாக நபர் ஒருவர் பொது சுகாதார பரிசோதகருக்கு முறையிட்டுள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் மாநகர சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் கடையினை சோதனையிட்ட போது , பழுதடைந்த குளிர் சாதன பெட்டியினுள் சமைத்த , சமைக்காத கோழி இறைச்சி, மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி என  45 கிலோ இறைச்சி மீட்கப்பட்டதுடன், உணவகத்தின் பல சுகாதார சீர்கேடுகள் காணப்பட்டதையும் அவதானித்துள்ளனர்.

அதனை அடுத்து இன்று வெள்ளிக்கிழமை குறித்த உணவகத்திற்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை அடுத்து, உணவகத்தினை உடனடியாக மூடி சீல் வைக்குமாறும், மீட்கப்பட்ட 45 கிலோ இறைச்சியை அழிக்குமாறும் உத்தரவிட்ட நீதவான் வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதம் 28ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.