சென்னை, புறநகர் பகுதிகளில் காஸ் சிலிண்டர் விநியோகத்தில் தாமதம்: 20 நாட்கள் வரை ஆவதாக புகார்

65 0

 சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காஸ் சிலிண்டர் பதிவு செய்தால், 10 முதல் 20 நாட்கள் வரை தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்கின்றன. சிலிண்டர் தீர்ந்து போனால், ஒருங்கிணைந்த குரல் சேவை பிரிவு மூலம் 24 மணி நேரமும் பதிவு செய்யலாம்.

வழக்கமாக, பதிவு செய்த ஓரிரு நாட்களுக்குள் புதிய சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விநியோகம் தாமதம் ஆவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

‘‘முன்பெல்லாம் சிலிண்டர் காலியானால், புதிய சிலிண்டர்பெற, குறைந்தது 20 நாட்கள்முதல் 1 மாதம் வரை காத்திருக்கும் நிலை இருந்தது. இது படிப்படியாக குறைக்கப்பட்டு, முன்பதிவு செய்த ஓரிரு நாளிலேயே சிலிண்டர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

மழை காலத்தில் மட்டும் சிலிண்டர் வருவதற்கு சற்றுதாமதம் ஆகும். மற்ற நாட்களில்எவ்வித பிரச்சினையும் இன்றி சிலிண்டர் விநியோகம் நடந்து வந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் சிலிண்டர் விநியோகத்தில் தாமதம் ஏற்படுகிறது. பதிவு செய்தால், 10 முதல் 20 நாட்கள் கழித்தே சிலிண்டர் வருகிறது. இதுபற்றிகேட்டால், விநியோக ஏஜென்சிகளும் முறையாக பதில் அளிப்பது இல்லை’’ என்றனர்.

இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தற்போது பயன்பாட்டில் உள்ள ஆயுட்காலம் முடிந்த மற்றும் துருப்பிடித்த சிலிண்டர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கேற்ப புதிய சிலிண்டர்கள் வரத்து குறைவாக உள்ளது. தாமதத்துக்கு இதுவே காரணம். இப்பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும்’’ என்றனர்.