இந்தியப் பெருங்கடலில் மாயமான தமிழக, கேரள மீனவர்கள் 10 பேர் மாலத்தீவில் மீட்பு

66 0

 இந்தியப் பெருங்கடலில் மாயமான தமிழக, கேரள மீனவர்கள் 10 பேரை மாலத்தீவு கடற்பகுதியில் கடலோரகாவல் படையினர் மீட்டனர்.

தமிழகத்தின் கிழக்குக் கடற்பகுதியான வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி கடற்பகுதிகளில் 2 மாத கால மீன்பிடித் தடைக்காலம் ஏப்.15 முதல் அமலுக்கு வந்தது.

ஆனால், இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் மீன்பிடிக்கத் தடையில்லை என்பதால் தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி படகுகளில் மீனவர்கள் தங்கு கடலுக்குச் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், ஏப்.16-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினத்திலிருந்து இந்தியப் பெருங்கடல் பகுதிக்கு லூர்துமாதா என்ற ஆழ்கடல் விசைப்படகில் சென்ற 10 மீனவர்கள் படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் மாயமாகினர்.

பின்னர் இந்தியக் கடலோர காவல் படையினர், மாலத்தீவு தேடுதல் மற்றும் மீட்புக் குழுவினர் உதவியுடன் மாலத்தீவு கடற்பகுதியில் மீனவர்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட 2 குமரி மாவட்ட மீனவர்களும், 8 கேரள மாநிலம் விழிஞ்சம் பகுதி மீனவர்களும் சனிக்கிழமை இரவு விசாகப்பட்டினம் துறைமுகத்துக்குப் படகுடன் கடலோரக் காவல்படையினர் கப்பல் மூலம் கொண்டு வரப்பட்டனர்.