கொழும்பில் 6,500 டெங்கு நோயாளர்கள் : பரவுவதை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை

118 0

நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார அமைச்சு துரித நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்  31,098 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இந்நிலையில் இந்நிலைமை மோசமடைய முன்னர் பல்வேறு டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள்  முன்னெடுக்கப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் கூறுகையில்,

இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு உடனடியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிபுணர் அறிக்கை ஒன்றை

வழங்குமாறு அமைச்சின் செயலாளருக்கு  பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு உள்ளிட்ட நிபுணர்களைக் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

டெங்கு வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைக்க ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

தொற்று நோய்களைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை செயல்படுத்த சுகாதார அதிகாரிகளுடன் பணிக்குழு செயல்படும்.

கம்பஹா மாவட்டத்தில் அதிகபட்சமாக 6,953 நோயாளிகளும், கொழும்பு மாவட்டத்தில் 6,500 நோயாளிகளும் பதிவாகியுள்ளனர்.

டெங்கு பரவாமல் தடுக்க நுளம்பு பரவும் இடங்களை அகற்றுதல், பாதுகாப்பு ஆடை அணிதல்  உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பொதுமக்களை அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.