தமிழகத்தில் உணவு பாதுகாப்பு துறைக்கு இணையதளம், குறைதீர்வு செயலி அறிமுகம்

65 0

உணவு பாதுகாப்பு துறைக்கு இணையதளம், நுகர்வோர் குறைதீர்வு கைபேசி செயலியை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், உணவு பாதுகாப்பு துறையின் இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்வு கைபேசி செயலியை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முதல்வர் வழிகாட்டுதலின்படி, உணவு பாதுகாப்பு தொடர்பாக www.foodsafety.tn.gov.in என்ற இணையதளமும், கைபேசி செயலியும் (TN CONSUMER APP) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இருமொழி (தமிழ், ஆங்கிலம்) மற்றும்மாற்றுத் திறனாளிகளும் எளிதாக பயன்படுத்தும் வகையில் ஸ்கிரீன்ரீடர் அணுகல் வசதியுடன் இந்தஇணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில், அனைத்து அமலாக்க அதிகாரிகளின் தொடர்புவிவரங்கள், உணவு ஆய்வகங்களின் முகவரி, அரசு உணவு பகுப்பாய்வு ஆய்வகங்களில் உணவு மாதிரி பகுப்பாய்வுக்கான கட்டண விவரம், கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் மீதான தடை உத்தரவு, துறை ரீதியான அறிவிப்புகள், நீதிமன்ற வழக்குகளின் உத்தரவு என உணவு பாதுகாப்பு துறை பற்றிய அனைத்து தகவல்களும் இடம்பெற்றுள்ளன. செயலி மூலமாகவும் இதை தெரிந்து கொள்ளலாம்.

மக்கள் எளிதாக கையாளும் வகையிலும், நுகர்வோரின் குறைகளை நிவர்த்தி செய்யும் விதமாகவும், உணவு பாதுகாப்பு துறை மூலம் பிரத்யேகமாக ‘தமிழ்நாடு உணவு பாதுகாப்பு நுகர்வோர் செயலி’ (TN Food safety Consumer App) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் (IOS) ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யலாம்.

ரசாயன கற்களால் பழுக்க வைக்கப்படும் பழங்களை சாப்பிடுவதால் உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. கடந்த ஒரு வாரத்தில் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட 16,209 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

மருத்துவ காப்பீட்டு திட்டம்: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின்கீழ் அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.553 கோடி, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.595 கோடி என மொத்தம் ரூ.1,148 கோடி காப்பீட்டுத் தொகை கடந்த ஆண்டு விடுவிக்கப்பட்டுள்ளது.

காப்பீட்டு திட்டத்தின்கீழ் அளிக்கப்படும் சிகிச்சைக்கு உரிய காப்பீட்டுத் தொகையை தனியார் மருத்துவமனைகள் பெற முடியாத சூழல் உள்ளது என்றும், தனியார் மருத்துவமனை நிர்வாகத்தின் பணிச்சுமை காரணமாக சிகிச்சை விவரங்களை உரிய காப்பீட்டு நிறுவனங்களுக்கு அளிக்க முடியவில்லை எனவும் குறிப்பிடுவது தவறு.

இதுதொடர்பான விதிமுறைகள் யுனைடெட் இந்தியா என்ற காப்பீட்டு நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை கடைபிடிக்காத தனியார் மருத்துவ நிறுவனங்களுக்கு இந்த தொகை விடுவிக்கப்படாது.

தனியார் மருத்துவமனைகளில் உறுதிபடுத்திக் கொள்ளாத தொகையாக காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து ரூ.241 கோடியே 15 லட்சத்து 90,806 அரசுக்கு திரும்ப வந்துள்ளது. எனவே, இந்த பணம் அரசுக்கு வரவில்லை என்று குறிப்பிடுவது தவறான செய்தி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.