‘மக்களைத் தேடி மேயர்’ திட்டம் இன்று தொடக்கம்: ராயபுரத்தில் மனுக்களை பெறுகிறார் மேயர்

62 0

மக்களைத் தேடி மேயர் திட்டத்தில் இன்று ராயபுரம் மண்டல பொதுமக்களிடமிருந்து மேயர் ஆர்.பிரியாநேரடியாகக் கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க உள்ளார்.

இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா, 2023-24-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பொதுமக்களின் குறைகளைக் கண்டறிந்து, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துத் தீர்வு காணும் வகையில், `மக்களைத் தேடி மேயர்’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்தார்.

இத்திட்டத்தை மேயர் பிரியா இன்று தொடங்கி வைக்கிறார். முதற்கட்டமாக வடக்கு வட்டார துணை ஆணையாளர் அலுவலகத்தில் காலை 10.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணிவரை ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட பொதுமக்களிடமிருந்து நேரடியாக கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார்.

அடிப்படை வசதி கேட்கலாம்: எனவே, சென்னை, வடக்கு வட்டாரம் ராயபுரம் மண்டல பொதுமக்கள் மக்களைத் தேடி மேயர் முகாமில் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை மேயரிடம் கொடுக்கலாம்.

சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில்வரி, குப்பை அகற்றம், ஆக்கிரமிப்பு அகற்றுதல், பூங்கா மற்றும் விளையாட்டுத் திடல் உள்ளிட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கி பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.