அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்கமும்,யேர்மனி ஒஸ்னாபுறூக்.

527 0

தியாகச்சுடர் அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்கமும் – யேர்மனி ஒஸ்னாபுறூக் நகரில் நினைவுகூரப்பட்டது.
தியாகச்சுடர் அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர் நினைவு வணக்கமும் 29-04-2023 சனிக்கிழமை அன்று ஒஸ்நனாபுறுக் நகரில் மிக எழுச்சியுடன் நினைவு கூரப்பட்டது. நிகழ்வில் முதலில் ஒஸ்னாபுறுக் தமிழாலய நிர்வாகி திரு.வாசன் வடிவேலு அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழீழ தேசியக் கொடியினை யேர்மன் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மத்திய மாநில பொறுப்பாளர்களில் ஒருவரான திரு.ராசா அவர்கள் ஏற்றி வைத்தார்.
மணலாறு நேரடிச் சமரில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட காசிம் என்று அழைக்கப்படும் பத்மநாதன் அப்புதுரை என்ற மாவீரரது சகோதரர் திரு.ரங்கநாதன் அப்புதுரை அவர்கள், தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களது திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்தார்.

அன்னை பூபதியோடு நினைவு கூரப்பட்ட அனைத்து நாட்டுப் பற்றாளர்களுக்கும் யேர்மன் இளையோர் அமைப்பைச் சேர்ந்த இளையவர்களும், தமிழாலய ஆசிரியர்களும் ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்தார்கள். தொடர்ந்து வருகை தந்திருந்த அனைவரும் சுடர் மற்றும் மலர் வணக்கம் செய்து அகவணக்கத்தோடு எழுச்சி நிகழ்வுகள் ஆரம்பமாகியது. தியாகச்சுடர் அன்னை பூபதியின் நினைவாக கவி வணக்கமும், இசைவணக்கமும் தொடர ஒஸ்னாபுறுக் தமிழாலய மாணவர்களது விடுதலை நடனங்கள் எழுச்சித் தீயை மூட்டியது. சிறப்பாக ஒஸ்னாபுறுக் இளையவர்கள் இணைந்து நிற்க, தேசியத் தலைவர் பற்றிய கவிதை பாடப்பட்ட பொழுது அரங்கமே விடுதலை உணர்வு கொண்டது. நிறைவாக தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களது 35ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வும், நாட்டுப்பற்றாளர்களது நினைவு வணக்க நிகழ்வும், தமிழீழத் தேசியக்கொடி இறக்கி வைக்கப்பட்ட பின்பு, மண்டபம் நிறைந்த மக்களோடு நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடல் ஒலிக்கவிடப்பட்டு,

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்தோடு நிறைவுபெற்றது.