ஈழத்தமிழர் பேரவை – பிரித்தானியா ஊடக அறிக்கை

255 0

ஈழத்தமிழர் பேரவை – பிரித்தானியா
ஊடக அறிக்கை
லண்டன்,1 மே 2023

“இலங்கைத் தீவில் தமிழர் தேசத்தின் தொன்மையும் தொடர்ச்சியான இருப்பும் அரசியல் உரிமையும்” – ஒரு நாள் மாநாடு

2023 ஐக்கிய இராட்சியத்தில் கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் பேரவையானது தனது முதலாவது மாநாட்டினை இம்மாதம் 15ம் திகதி திங்கட்கிழமை பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.

ஈழத்தமிழர் தமது தன்னாட்சி உரிமையை பயன்படுத்தி தேசத்தை உடையவர்கள் என்பதனை அங்கீகரிக்குமாறு ஐநாவை வேண்டுவதுடன், இதனை வலியுறுத்துமாறு உலக நாடுகளிடம் குறிப்பாக பிரித்தானிய அரசைக் கோருதல் இம்மாநாட்டின் முதன்மையான நோக்கமாகும்.

இலங்கைத் தீவில் நடைமுறையிலிருக்கும் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் தமிழர் தேசத்திற்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது என்பதனையும், இவ்வாட்சி முறைக்கு உட்பட்ட 13ம் திருத்தச் சட்டமூலத்தினை அரசியற்தீர்வின் ஆரம்பப்புள்ளியாகவேனும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் இம்மாநாடு வலியுறுத்தவுள்ளது.

போர் முடிவுற்ற பின்னரும் தமிழினவழிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் ஸ்ரீலங்கா அரசை, அனைத்துலக மட்டத்தில் விலக்கிவைப்பதற்கு சனநாயக வழிகளில் போராட ஈழத்தமிழர்கள் ஒரு தேசமாக வீறுகொண்டு எழுந்துள்ளனர் என்பதனை உலகிற்கு பறைசாற்றுவதும் இம் மாநாட்டின் குறிக்கோள்களில் ஒன்றாகும்.

மூலோபாய ரீதியில் முக்கியம் பெறும் தமிழர் தாயகப்பகுதிகளை மையப்படுத்தி நிகழும் பூகோள அரசியற் போட்டியினால் எழுந்திருக்கும் கருத்துக் குழப்பங்களுக்கு தெளிவினை ஏற்படுத்தி, தமிழ்மக்கள் எழுச்சிமிக்கவர்களாக ஒன்றிணைந்து பயணிப்பதற்கு வலுச்சேர்ப்பதாக இம்மாநாடு அமையும்.

ஈழத்தமிழர் பேரவை – ஐக்கிய இராட்சியம்

தமிழர்களின் அரசியல் வேணவாவை உறுதிப்பட ஒரே குரலில் வெளிப்படுத்தவும், தாயகத்தில் வாழும் தமிழ்மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கு உதவுவதற்காகவும், ஐக்கிய இராட்சியத்தில் வாழும் புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஈழத்தமிழர் பேரவை – ஐக்கிய இராட்சியம் உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழர் தேசத்தின் அரசியல் விடுதலைக்கு சிறிலங்காவின் ஒற்றையாட்சி முறைமை தீர்வாகாது என்பதனை நன்குணர்ந்து, 1977ம் ஆண்டு நடைபெற்ற இலங்கைப் பொதுத் தேர்தலில் தமிழ் மக்களின் ஆணை பெறப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அடையும் நோக்கில் ஈழத்தமிழர் பேரவை பணிகளை மேற்கொள்ளும்.
அனைத்துலக ஈழத்தமிழரவையில் அங்கம் வகிக்கும் அமைப்புகளுடனும், மேற்படி அரசியல் அடிப்படைகளை ஏற்று பல நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புகளுடனும், இதர தோழமை அமைப்புகளுடனும் ஈழத்தமிழர் பேரவை இணைந்து பணியாற்றும்.