உக்ரேனில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதல்களில் 9 பேர் பலி

188 0

உக்ரேனில் நேற்றிரவு ரஷ்ய படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தபட்சம் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைநகர் கியேவ் உட்பட பல இடங்கள் மீது நேற்றிரவு ரஷ்யா வான் வழித் தாக்குதல்களை நட்ததியது.

உமான் நகர் மீது ஏவப்பட்ட ஏவுகணைகள், குடியிருப்புக் கட்டடங்களைத் தாக்கியுள்ளன. இதனால் 7 பேர் காயமடைந்ததுடன் மேலும் பலர் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டினிப்ரோ நகரம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பெண்ணொருவரும் அவரின் 3 வயது மகளும் உயிரிழந்துள்ளனர் என உள்ளூர் மேயர் தெரிவித்துள்ளார்.

தலைநகர் கியேவ் மீது 51 நாட்களின் பின்னர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உள்ளூர் இராணுவ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

51 நாட்களின் பின்னர், கியேவ் மீது எதிரியின் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என இராணுவ நிர்வாகத்தின் தலைவர் சேர்ஜி பொப்கோ கூறியுள்ளார்.

இதேவேளை, தலைநகர் கியேவ்வில் ரஷ்யாவின் 21 ஏவுகணைகளையும்,  இரு ட்ரோன்களையும்  தான் சுட்டு வீழ்த்தியதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.