யாழ்ப்பாணம், புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதுடன், வைத்தியரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் மூவர் அச்சுவேலி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு, நேற்று (27) வியாழக்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்ற உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது:
கடந்த 10ஆம் திகதி புத்தூர் சந்தியில் உள்ள ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்துக்கு அருகில் தண்ணீர்ப் பந்தல் அமைத்த இளைஞர்கள் ஒலிபெருக்கியை அதிக சத்தத்தில் ஒலிக்கவிட்டுள்ளனர்.
இதனையடுத்து, தண்ணீர்ப் பந்தல் அமைக்கப்பட்டிருந்த இடத்துக்குச் சென்றிருந்த வைத்தியரொருவர் ஒலிபெருக்கியின் சத்தத்தை குறைக்கும்படி கேட்டுள்ளார்.
அதன்போது வைத்தியருக்கும் இளைஞர்களுக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்படவே, வைத்தியர் அங்கிருந்து புறப்பட்டு, மருத்துவ நிலையத்துக்குச் சென்றுள்ளார்.
அதன் பின்னர், மருத்துவ பராமரிப்பு நிலையத்துக்குள் நுழைந்த சிலர் தாக்குதல் நடத்தியதுடன் வைத்தியருக்கு அச்சுறுத்தலும் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக குறித்த வைத்தியர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற தினமே வைத்தியர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தபோதிலும், பொலிஸார் விசாரணைகளில் அசமந்தப்போக்கு காட்டியதால், வைத்தியசாலை வைத்திய உத்தியோகத்தர்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி கடமை புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அறிவித்திருந்தனர்.
இந்நிலையிலேயே பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தி தாக்குதலோடு தொடர்புடைய மூவரை கைதுசெய்துள்ளனர்.
கைதான மூவரிடமும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்றில் மூவரும் ஆஜர்படுத்தப்பட்டபோது, சந்தேக நபர்களை எதிர்வரும் மே 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

