டொனால்ட் ட்ரம்ப் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தினார் என அமெரிக்க எழுத்தாளர் ஒருவர் நீதிமன்றில் வாக்குமூலம் சாட்சியம் அளித்தார்.
ஈ. ஜீன் கரோல் எனும் இப்பெண், நியூஹோர்க்கின் மென்ஹட்டன் சமஷ்டி நீதிமன்றத்தில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்புக்கு எதிராக நேற்று புதன்கிழமை சாட்சியம் அளித்தார்.
1996 ஆம் ஆண்டு, மென்ஹெட்டன் நகரிலுள்ள பேர்க்டோர்க் குட்மேன் வர்த்தக நிலையத்தின் ஆடைமாற்றும் அறையில் வைத்து தன்னை டொனால்ட் ட்ரம்ப் வல்லுறவுக்கு உட்படுத்தினார் என தற்போது 79 வயதான கரோல், சாட்சியமளித்தார்.
இச்சம்பவத்தினால் தான் அவமானமாக உணர்ந்ததாகவும் காதல் உறவை ஏற்படுத்திக்கொள்ள தன்னால் முடியாமல் இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
‘ட்ரம்ப் என்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதால் நான் இங்கு வந்துள்ளேன்’ என அவர் கூறினார்.
2017 முதல் 2021 ஆம் ஆண்டுவரை அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகித்த டொனால்ட் ட்ரம்ப், 2020 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியுற்றார். 79 வயதான அவர் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
பெண்களின் உள்ளாடையொன்றை வாங்குவது தொடர்பாக வேடிக்கையாக ஆலோசனை கேட்ட ட்ரம்ப், ஆடை மாற்றும் அறையின் சுவரை நோக்கி தன்னை ட்ரம்ப் தனது உடலினால் தள்ளி அழுத்தியதுடன் தன்னை வல்லுறவுக்குட்படுத்தினார் என நீதிமன்றத்தில் கரோல் கூறினார்.
2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தனது நூல் ஒன்றில், ட்ரம்ப் தன்னை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாக முதன்முதலில் கரோல் முன்வைத்திருந்தார்.
அதையடுத்து தன்னை டொனால்ட் ட்ரம்ப் அவதூறுபடுத்தினார் எனவும் ஈ ஜோன் கரோல் குற்றம் சுமத்தியுள்ளார்.
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக மறுத்து வருகிறார். டொனால்ட் ட்ரம்ப் எதிர்கொள்ளும் பல்வேறு வழக்குகளில் ஒன்றாக இது உள்ளது.

