தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் அதிகரிக்கப்பட்ட எரிபொருள் கோட்டவில் மறு அறிவித்தல் வரை எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சர் காஞ்சன விஜேசேகர தலைமையில் திங்கட்கிழமை (24) இடம்பெற்ற பெற்றோலியக் கூட்டுதாபன மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மின்சக்தி மற்றும் வலு சக்தி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் , மாதாந்தம் முற்பதிவு செய்யப்படும் எரிபொருட்களின் அளவில் மாற்றங்கள் ஏற்படவில்லை.
கடந்த 3 வாரங்களில் நாளாந்த எரிபொருள் பாவனை மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பில் தரவு மதிப்பாய்வில் எரிபொருள் கோட்டாவினை அதிகரிப்பதற்கு முன்னர் காணப்பட்ட அன்றாட விநியோகத்திற்கு சமாந்தரமாகவே காணப்பட்டுள்ளமையும் இனங்காணப்பட்டுள்ளது.
அத்தோடு எரிபொருள் கோட்டா அதிகரிக்கப்பட்டதன் பின்னர் கியூ.ஆர். குறியீடுகளை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் வீதம் குறைவடைந்துள்ளது.
கோட்டா அதிகரிக்கப்பட முன்னர் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கியூஆர். குறியீட்டுக்கு புறம்பாக 24 சதவீத பெற்றோல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அது தற்போது 14 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது. இதே போன்று டீசல் விநியோகம் 28 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாகக் குறைவடைந்துள்ளது.
கியூ.ஆர். குறியீட்டு முறைமைக்கு புறம்பாக எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு இனங்காணப்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கெதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

