இலங்கை மின்சார சபையை ஒக்டோபர் மாதத்துக்குள் மறுசீரமைக்க உத்தேசம்

162 0

இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பது தொடர்பான நிபுணர் குழு அறிக்கை எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதத்துக்குள் மறுசீரமைப்பு பணிகளை நிறைவு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.

மின்சார சபை மறுசீரமைப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் பட்டியலில் மின்சார சபை, பெற்றோலிய கூட்டுத்தாபனம், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் முன்னிலையில் உள்ளன.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய வகையில் நியமிக்கப்பட்ட குழு அறிக்கையை அடிப்படையாக கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய மறுசீரமைப்பு தொடர்பான அறிக்கையை எதிர்வரும் மே மாதம் முதல்வாரத்தில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மறுசீரமைப்பின் போது மனித வள முகாமைத்துவத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி,உலக வங்கி,உட்பட சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் எவரது தொழிலுரிமைக்கும் பாதிப்பு ஏற்படாது. அரசாங்கத்துக்கு சுமையாக உள்ள நிறுவனங்கள் தொடர்பில் கடுமையான தீர்மானம் எடுக்காவிட்டால் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்பது வெறும் அரசியல் பிரச்சாரமாகும்.

ஒரு சில அரச நிறுவனங்கள் தனியார் மயப்படுத்தியுள்ளதால் பொது மக்களுக்கான சேவைகள் வினைத்திறனாக கிடைக்கப் பெறுகிறது என்றார்.