அஹுங்கல்ல- மித்தரமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கரந்தெனிய இராணுவ ஆயுத புலனாய்வு படைப்பிரிவு முகாமில் புத்தாண்டு தினத்தன்று சேவையில் ஈடுபட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த 36 துப்பாக்கிகள் பொலிஸாரால் பொறுப்பேற்கபட்டுள்ளது.
கடந்த 14ஆம் திகதி மாலை அஹூங்கல்ல – மீத்தரமுல்ல பகுதியில் நபரொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த மோப்ப நாய் குறித்த முகாமிற்குள் நுழைந்ததன் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரசாயன பகுப்பாய்வு அறிக்கையை பெற்றுக் கொள்வதற்காக இந்த ஆயுதங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
அஹூங்கல்ல – மீத்தரமுல்ல அமரமோலி மாவத்தையைச் சேர்ந்த தரிந்து தனுஷ்க சில்வா எனும் நபர் கடந்த 14ஆம் திகதி தனது சகோதரியின் இரு பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளந் தெரியாத இருவரினால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதன் போது காயமடைந்த நபர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த 5 வயது மற்றும் ஒன்றரை வயது சிறுவர்கள் காயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கரந்தெனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராணுவ புலனாய்வுப் படை முகாமுக்கு அருகில் உள்ள கறுவாத்தோட்டத்துக்கு அருகில் இருந்து கடந்த 15 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

