எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தவுடன் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்!

123 0

உத்தேச பயங்கரவாத  எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தவுடன் உயர்நீதிமன்றத்தை நாடுவோம்.

திருத்தங்கள் இல்லாமல் இந்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.

கொழும்பில்இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் 1979 ஆம் ஆண்டு தற்காலிக ஏற்பாடாக கொண்டு வரப்பட்டது.

பயங்கரவாதவாத தடைச்சட்டத்தின் பெரும்பாலான ஏற்பாடுகள் 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் தன்மையில் உள்ள காரணத்தினால் பயங்கரவாத தடைச்சட்டம் ஆறு மாத காலத்தை வரையறுத்ததாக காணப்பட்டது.

நாட்டில் யுத்தச் சூழல் தீவிரமடைந்த பின்னணியில் இந்த சட்டத்தை மறுசீரமைக்க அவதானம் செலுத்தப்படவில்லை.

யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் நிறைவு பெறும் பின்னணியில் தொடர்ந்து பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துவது பொறுத்தமற்றது.

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்த சட்டம் பிற்பட்ட காலங்களில் அரசியல் பழிவாங்கல்களுக்காக பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

ஜனநாயக கொள்கை, மனித உரிமை உள்ளிட்ட அம்சங்கள் உலக மாற்றத்துக்கு அமைய மாற்றமடைந்துள்ளன.

நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டம் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரான அம்சங்களை கொண்டுள்ளதாக சர்வதேசம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ள பின்னணியில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுபெற்றுள்ள நிலையில் உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த சட்டமூல வரைபின் பெரும்பாலான ஏற்பாடுகள் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானதாக காணப்படுகிறது.

தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபருக்கு வழங்க பரிந்துரைத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.

பொலிஸாரின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலை காணப்படுகிறது.மறுபுறம் பயங்கரவாதம் என்பதற்கான வரைவிலக்கணம் விரிவானதாக காணப்படுகிறது.

அரசாங்கத்தின் விருப்பத்திற்கு ஏற்ப எதனையும் பயங்கரவாத செயற்பாடாக அடையாளப்படுத்த முடியும்.உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டவுடன் அதனை உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம். திருத்தங்களில்லாமல் இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடும் சகலரும் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவார்கள் என்றார்.