2 ஆவது தடவையாகவும் தேர்தலை ஒத்திவைத்தது ஆணைக்குழு

151 0

நிதி கிடைக்கப் பெறாமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் இரண்டாவது முறையாகவும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஒத்தி வைப்பதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தலுக்கான நிதி கிடைக்கப் பெறும் தினம் அல்லது நீதிமன்ற தீர்ப்பு என்பவற்றின் அடிப்படையிலேயே தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து திங்கட்கிழமை (10) பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கும் தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்களுக்குமிடையில் தீர்க்கமான சந்திப்பு இடம்பெற்றது.

இதன் போது ஏற்கனவே திட்டமிட்ட படி இம்மாதம் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவது கடினமானது என அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இது குறித்து செவ்வாய்கிழமை (11) ஆணைக்குழு உறுப்பினர்களுக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலின் போதே மீண்டும் தேர்தலை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை உரியவாறு நடத்துவதற்காக தேர்தல் ஆணைக்குழு அதன் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்தது.

தேர்தலை நடத்துவதற்கு தேவையான நிதி கிடைக்கப் பெறாமை மற்றும் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விதத்திலான விடயங்களின் காரணமாக இம்மாதம் 25ஆம் திகதி நடத்தப்படவிருந்த தேர்தலை இரண்டாவது முறையாகவும் ஒத்தி வைக்க வேண்டியேற்பட்டுள்ளது.

எனவே உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களை நடத்துவதற்கு தேவையான நிதி கிடைக்கப் பெறுகின்ற ஸ்திரமான தினம் அல்லது உயர் நீதிமன்றத்தில் காணப்படுகின்ற வழக்குகளுக்கமைய நீதிமன்றத்தினால் வழங்கப்படுகின்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே திகதியைத் தீர்மானிக்க முடியும்.

எவ்வாறிருப்பினும் தேர்தல் ஆணைக்குழு உள்ளூராட்சிமன்றத் தேர்தலை துரிதமாக நடத்துவதற்கு தேவையான சகல முயற்சிகளையும் , அதற்கான செயற்பாடுகளையும் முன்னெடுத்துச் செல்லும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.