முன்னாள் காதலியின் திருமணத்திற்கு ஹோம் தியேட்டரில் வெடிகுண்டு வைத்து பரிசளித்த நபர்: புது மாப்பிள்ளை உயிரிழப்பு

121 0

தனது முன்னாள் காதலியின் திருமணத்திற்கு ஹோம் தியேட்டரில் வெடிகுண்டு வைத்து பரிசளித்துள்ளார் இளைஞர் ஒருவர். அந்த குண்டு வெடித்ததில் புது மாப்பிள்ளையும், அவரது சகோதரரும் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மேலும், குண்டு வெடித்ததில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர் எனத் தெரிகிறது.

போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் மணப்பெண்ணின் முன்னாள் காதலர் இந்த நாச வேலையை செய்துள்ளார் என அறிந்து கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தில் உள்ள கபீர்தம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

இதில் அந்த ஹோம் தியேட்டர் வைக்கப்பட்டிருந்த அறையின் சுவர் மற்றும் மேற்கூரை பெயர்ந்துள்ளது. திருமணப் பரிசாக வந்த ஹோம் தியேட்டரை மாப்பிள்ளை ஹேமேந்திர மேராவி, ஸ்விட்ச் பாக்ஸில் கனெக்ட் செய்து, ஆன் செய்துள்ளார். அதனால் குண்டு வைக்கப்பட்ட அந்த எலக்ட்ரானிக் சாதனம் வெடித்ததில் அவர் உயிரிழந்துள்ளார். அவரது சகோதரர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் அவரும் உயிரிழந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக ஹோம் தியேட்டரில் குண்டு வைத்த நபரை அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். அவர் பெயர் சர்ஜூ எனத் தெரிகிறது. தனது முன்னாள் காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட காரணத்தால் ஆத்திரமடைந்த அவர் இந்தச் செயலை செய்ததாக போலீஸில் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.