முதலாம் தவணையின் முதற்கட்ட விடுமுறை இன்று 17ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும்

114 0

நாடளாவிய ரீதியிலுள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் இவ்வாண்டுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட விடுமுறை இன்று (04) வழங்கப்படவுள்ளது. அதற்கமைய 17ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளுக்கு 5ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை முதலாம் தவணைக்கான முதற்கட்ட விடுமுறை வழங்கப்படவுள்ளது. 17ஆம் திகதி முதல் மே 12ஆம் திகதி வரை முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அதன் பின்னர் 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைகளை முன்னிட்டு மே 13ஆம் திகதி முதல் 24ஆம் திகதி வரை இரண்டாம் கட்ட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது.

தொடர்ந்து மே 25ஆம் திகதி முதல் ஜூலை 20ஆம் திகதி வரை மூன்றாம் கட்ட கல்வி செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். ஜூலை 21 முதல் 23ஆம் திகதி வரை மூன்றாம் கட்ட விடுமுறை வழங்கப்படும்.

இவ்வாண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜூலை 24 முதல் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை இடம்பெறும். ஒக்டோபர் 14ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்காக விடுமுறை வழங்கப்படும்.

இதே போன்று மூன்றாம் தவணைக்கான முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நவம்பர் 13ஆம் திகதி முதல் டிசம்பர் 22ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. டிசம்பர் 23ஆம் திகதி முதல் 2024 ஜனவரி முதலாம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும். 2024 ஜனவரி 2ஆம் திகதி முதல் பெப்ரவரி 9ஆம் திகதி வரை இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு மார்ச் மாதம் அறிவித்திருந்தது.

எவ்வாறிருப்பினும் தற்போது 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் சுமார் ஒரு மாதம் கால தாமதமாகியும் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதால் சாதாரண பரீட்சை மற்றும் ஏனைய விடுமுறை தினங்களில் மாற்றங்கள் ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.