இணை ஆணையராக நீதிபதியை நியமித்தால் கோயில்களில் ஒரே மாதத்தில் மாற்றம் ஏற்படும்: உயர் நீதிமன்றம் கருத்து

74 0

 தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையராக நீதிபதியை நியமித்தால், கோயில்களில் ஒரு மாதத்தில் மாற்றங்களை பார்க்கலாம் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தைச் சேர்ந்த கணேசன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலுக்குச் சொந்தமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆபரணங்கள், 1600 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இதில் பெருமளவு நிலத்தை தனியார் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதை மீட்டால் கோயிலுக்கு அதிக அளவில் வருவாய் ஈட்ட முடியும்.

இந்நிலையில் விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வருமானம் இல்லாத கோயில் என்று கூறி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுடன் இணைத்து இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் வருமானம் குறைவாக இருப்பதால், அதனை துணைக் கோயிலாக கருதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுடன் இணைக்கப்பட்டுள்ளது.

துணைக்கோயிலின் வருமானங்கள் அனைத்தும் முதன்மை கோயில் வங்கிக் கணக்கில் வரவு வைக்க முடியும். துணைக் கோயில் திருவிழா, ஊழியர்களின் ஊதியம் ஆகியன முதன்மை கோயிலில் இருந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் ‘தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் பொறுப்பை நீதிபதி ஒருவரிடம் அளித்தால், ஒரு மாதத்தில் கோயில்களில் ஏற்படும் மாற்றங்களை பார்க்க முடியும்’ என கருத்து தெரிவித்தனர்.

பின்னர் தங்களின் உத்தரவில், விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலை திருச்செந்தூர் கோயிலுடன் இணைத்து அறநிலையத் துறை ஆணையர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டால் வருவாய் அதிகரிக்கும். ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் 2022 நவம்பரில் உத்தரவிட்டது. ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற தூத்துக்குடி ஆட்சியர், விளாத்திகுளம் வட்டாட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை.

கோயில் நில ஆக்கிரமிப்பாளர்கள் பட்டியல், அந்த நிலத்திலிருந்து கிடைக்கும் வருமானம் ஆகிய விவரங்களையும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான திட்ட அறிக்கையையும் அறநிலையத் துறை ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.