மன்னாரில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக கவயீர்ப்பு போராட்டம்

67 0

மன்னாரில் சட்டவிரோத மண் அகழ்வுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்  இன்று வியாழக்கிழமை (30) காலை இடம்பெற்றது.

இப்போராட்டம் மன்னார் மாவட்ட செயலகத்துக்கு முன்பாக தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் வீ.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்றது.

 

மன்னாரிலுள்ள பலதரப்பட்ட அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் மதத் தலைவர்களும்  கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவர்கள் பலதரப்பட்ட வாசகங்கள் கொண்ட பதாதைகளை தங்கள் கையிலேந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதாவது ‘அரசியல்வாதிகளே நீங்களும் இதற்கு உடந்தையா?’ ‘எதிர்கால சிந்தனை அற்ற பொறுப்பற்ற அரச அதிகாரிகளே’, ‘மன்னாரை பாலைவனமாக்கப் போகின்றீர்களா?’, ‘விவசாய நிலங்கள் உவராகி விட்டன் வாழ்வுக்கு வழியேது?’, ‘சட்டத்தரணிகளே மண் மாப்பியால்களை காப்பாற்றாதீர்கள்’ இவ்வாறு கொண்ட வாசகங்கள் ஏந்திய வண்ணம் காணப்பட்டனர்.

‘இயற்கையே பேரிறைவன் மண்ணும் மரமும் இல்லையேல் மனிதன் உயிர் வாழ முடியாது. இயற்கைக்கு எதிரான மனிதனின் செயற்பாடே இயற்கை பேரிடருக்கு அடிப்படை ஆகவே இயற்கையை காப்போம்’ என்ற தொனிப்பொருளிலும்  கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றதுடன் பொதுமக்களுக்கு இது தொடர்பாக துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.