எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : ஏப்ரலில் பொது இணக்கப்பாட்டுக்கு வரத் தீர்மானம்

73 0

நாட்டின் கடற்பரப்பில் தீ விபத்துக்குள்ளாகி கடலில் முழுமையாக மூழ்கிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரமளவில் பொது இணக்கப்பாட்டுக்கு வர தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுற்றாடற்துறை தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் அஜித் மான்னபெரும தெரிவித்தார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

2021 ஆம் ஆண்டு மே மாதம் கொழும்புக்கு அண்மையில் நீர்கொழும்பை அண்டிய கடற்பகுதியில் எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்கு கப்பல் தீ விபத்துக்கு உள்ளாகி கடலில் முழுமையாக மூழ்கியது.

இந்த தீ விபத்தினால் கடல் வளத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்கு குறித்த நிறுவனத்தில் இருந்து நட்ட ஈட்டை பெற்றுக்கொள்வதற்கு வழக்கு தாக்கல் செய்யும் விடயத்தில் இரு வேறுபட்ட நிலைப்பாடு காணப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் வாரமளவில் பொது இணக்கபாட்டை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் விபத்து தொடர்பில்  நீதியமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ள 40 துறைசார் நிபுணர்களை உள்ளடக்கிய ஆய்வு அறிக்கையை சுற்றாடற்துறை தொடர்பான பாராளுமன்ற மேற்பார்வை குழுவில் பரிசீலனை செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

கப்பல் மூழ்கிய பகுதிக்கு சென்று ஆய்வு அல்லது கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்ட சிக்கல் காணப்படுகிறது. ஆகவே சகல தரப்பினருடன் இணக்கப்பாட்டுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தீர்மானித்துள்ளோம் என்றார்.