சஜித்தே அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் !

81 0

பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எண்ணுகின்றார். எந்த கட்சியில் யார் வேட்பாளரானாலும் சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார் என பாராளுமன்ற உறுப்பினர் அஷோக அபேசிங்க தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில் ,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கம் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிடுவதாகும். பொதுஜன பெரமுனவிலுள்ள கொள்ளையர்களுடன் இணைந்து போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற முடியும் என அவர் எண்ணுகின்றார். ஐ.தே.க.வில் மாத்திரமல்ல. எந்த கட்சியில் யார் வேட்பாளரானாலும் சஜித் பிரேமதாசவே அடுத்த ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.

200 ரூபாவை விடக் குறைவாகக் காணப்பட்ட எரிபொருள் விலையை 500 ரூபா வரை அதிகரித்து , பின்னர் மீண்டும் விலைகளை குறைக்கும் போது அப்பாவி மக்கள் ஏமாறுகின்றனர். இவ்வாறு மக்களை ஏமாற்றி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று ஜனாதிபதி எண்ணுகின்றார். டொலர் பெறுமதியின் உயர்வு மற்றும் வீழ்ச்சி என்பவற்றிலேயே இவை தங்கியுள்ளன. இது வழமையானதாகும். யார் ஆட்சிக்கு வந்தாலும் இவை வழமை போன்று இடம்பெறும்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கப் பெற்றுள்ளமை மகிழ்ச்சிகுரியதாகும். எனவே தான் வெளிநாட்டு தூதுவர்களையும் , இராஜதந்திரிகளையும் அழைத்து எமக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்தார். எவ்வாறிருப்பினும் நாணய நிதியத்திடமிருந்து கடனுதவி கிடைக்கப் பெற்றுள்ளது என்பதற்காக மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வாக்களிக்கப் போவதில்லை என்றார்.