ஜனாதிபதி தேர்தல் : ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணியமைக்க தீர்மானிக்கவில்லை

77 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும்,ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணியமைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.ஜனாதிபதி தேர்தலில் தனித்து பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட வேண்டும் என கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் கோரிக்கை வி;டுத்துள்ளார்கள் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கியுள்ளோம்.அரசியல் கொள்கை ரீதியில் இரு தரப்பிற்கும் இடையில் வேறுப்பாடுகள் காணப்படுகின்றன.பொதுஜன பெரமுன கொள்கை அடிப்படையில் செயற்படும்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை தடுக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகித்ததாக எதிர்க்கட்சிகள் குறிப்பிடுவது அடிப்படையற்றது,நாளை தேர்தல் இடம்பெற்றாலும் போட்டியிட தயாராகவுள்ளோம்.தேர்தலை விரைவாக நடத்துமாறு குறிப்பிடும் எதிர்க்கட்சிகள் தான் தேர்தலை ஏதாவதொரு வழியில் பிற்போடுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்கள்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இழுபறி நிலையில் உள்ள பின்னணியில் தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.அரசியலமைப்பின் பிரகாரம் 2024 நவம்பர் மாதத்திற்கு பின்னரே ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும்.ஆகவே ஜனாதிபதி தேர்தல் குறித்து தற்போத அவதானம் செலுத்துவது அவசியமற்றது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும்,ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணியமைத்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக வெளியாக செய்தி அடிப்படையற்றது,ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் வெகுவிரைவில் மறுசீரமைக்கப்படும்.கட்சியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.