மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு அரசாங்கத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டமாக அமையும்

82 0

நாட்டின் சுயாதீன ஆணைக்குழுக்கள் வலுவிழந்துள்ளன. அதன் அதிகாரங்கள் ஜனாதிபதியின் கைகளில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தற்போது மத்திய வங்கியினையும் சுயாதீனமாக மாற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எதிர்காலத்தில் மத்திய வங்கியும் சுயாதீனமாக மாற்றப்படுமாயின். நிச்சயம் அது அரசாங்கத்தை பாதுகாக்கும் வேலைத்திட்டமாகவே அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்துள்ளார்.

கண்டி, நாவலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

இன்று நாட்டில் காணப்படுகின்ற சுயாதீன ஆணைக்குழுக்கள் ஜனாதிபதி கைகளில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. நாட்டுக்கும், சர்வதேசத்துக்கும் தெரியும், நாட்டின் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் நிலைமை எவ்வாறு உள்ளதென்பது.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கை மத்திய வங்கியினை சுயாதீனமாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.

நாட்டின் இன்றைய பொருளாதார நிலைக்கும், பொருளாதார நெருக்கடிகள் உக்கிரமடைந்து வங்குரோத்து நிலைக்கு நாடு செல்வதற்கும் இலங்கை மத்திய வங்கியினை முகாமை செய்தவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நண்பர் அர்ஜுன் மகேந்திரன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இவ்வாறான ஆளுநர்களின் செயற்பாடுகள், பிழையான கொள்ளைகள், பிழையான வழிமுறைகளால் தான் இந்த மோசமான நிலைக்கு நாடும், நாட்டு மக்களும்  தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் எதிர்காலத்தில் இலங்கை மத்திய வங்கியின் செயற்பாடுகளை ஒழுங்குமுறைப்படுத்தவும், சரியான முறையில் நடைமுறைப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதனை விடுத்து மத்திய வங்கியினை சுயாதீனமாக மாற்றுகின்றோம் என்று கூறுகிற வகையில், அதிலிருக்கும் ஆளுநராக இருக்கலாம் அல்லது நிர்வாக சபையாக இருக்கலாம்… அதன் அங்கத்தவர்களை நியமிக்கும்போது, அது அரசியல் நியமனமாக அமையும்.

மேலும், ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் இதனை மேற்கொள்ளுமாயின், அங்கு இருக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்தை காப்பாற்றும் வேலைத்திட்டமாகவே கருதப்படும். இவ்வாறானதொரு நிலைமை எமது நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப  சரியானதொரு வழிமுறையல்ல என்றார்.