புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலத்தை அடுத்த அமர்வில் சபையில் சமர்ப்பிப்போம்

86 0

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக அரசாங்கத்தினால் புதிதாக கொண்டு வரப்படவுள்ள புதிய பயங்கரவாத தடைச் சட்ட மூலத்தை அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது சபையில் சமர்ப்பிக்க முடியும் என சபை முதல்வரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  எம் பி எழுப்பிய கேள்வி யொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இவ்வாறு தெரிவித்தார்.

ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில், புதிய பயங்கரவாத தடைச்சட்டம் வர்த்தமானிப் படுத்தப்பட்டிருக்கிறது. அதனை எப்பாேது பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க எதிர்பார்க்கிறது என கேட்டார்.

அதற்கு அமைச்சர் சுசில் பதிலளிக்கையிலேயே  அடுத்த பாராளுமன்ற அமர்வின் போது சபையில் சமர்ப்பிக்க முடியும் என தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலம் நேற்று (23) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் அறிவுறுத்தலுக்கு இணங்க புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை காலமும் பயங்கரவாத தடைச் சட்டம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அதனை தேசிய பாதுகாப்பு சட்டமாக கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்தது.

அது தொடர்பில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஏற்கனவே பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தியுள்ளார். அதற்கிணங்க புதிய சட்டமூலத்தை தயாரிப்பதற்காக விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டு சட்ட மூலம் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில் அது நேற்று (23) வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது இந்த சட்டமூலத்தை தயாரிப்பதற்கான நோக்கமாகும் என்றும் நீதியமைச்சு தெரிவித்துள்ளது.