கடன் உதவி ஊழல்வாதிகளை பாதுகாக்கவே பயன்பட போகிறது

88 0

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி என்பது இலங்கை வரலாற்றில் புதிய விடயம் இல்லை என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

ஊடக அறிக்கையில் இன்று (24.03.2023) அவர் இந்த விடயத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஜெயவர்த்தன அரசாங்கத்தில் இருந்து பிரேமதாச, சந்திரிக்கா, மகிந்தராஜபக்ச போன்ற ஜனாதிபதிகளின் காலத்திலும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைத்துள்ளது.

ஆனால் அவ் உதவி மூலம் நாடு வளர்வதற்கு பதிலாக ஊழல் பெருச்சாளிகளே வளர்ந்தன இதுவரை கிடைத்த உதவியை விட பெருந்தொகையான உதவி இம்முறை கிடைக்கவுள்ளது.

இந்த உதவி பல கடினமான நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம்தான் இலங்கைக்கு கிடைக்கின்றது.இதனால் சிறிது காலம் செல்ல நிபந்தனைகளின் பாதிப்பை பொது மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளதை புரியாது பாராட்டுக்களும் வெடி அடிப்புக்களும் நடைபெறுவதை பார்ப்பது பரிதாபமாக உள்ளது.

மனிதவுரிமை மீறல்களுக்கான நீதி கொடுக்கப்படாமல் உள்நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்காமல் நாணய நிதியத்தின் கடன் உதவி மூலம் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவது சாத்தியமானது இல்லை.

ஆகவே கிடைக்கும் கடன் உதவி ஊழல்வாதிகளை பாதுகாக்கவே பயன்பட போகிறது என்ற கசப்பான உண்மையை நாட்டு மக்கள் வெகு விரைவில் உணர்வார்கள் என தெரிவித்துள்ளார்.