டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை சுபாஸ்கரன் அல்லிராஜாவிற்கு வழங்க அவதானம்

123 0

இலங்கை டெலிகொம் நிறுவனத்தின் அரச பங்குகளை சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதாரம்,தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் நிர்வகிக்கும் நிலைமை தோற்றம் பெறும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற சர்வதேச நாணய நிதிய ஒத்துழைப்பு தொடர்பில் ஜனாதிபதியின் விசேட உரை மீதான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டதை அரசாங்கம் பெருமையாக கொள்கிறது, அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகிறார்கள்.கடன் பெற்றதை கொண்டாட வேண்டுமாயின் சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இருந்து கொண்டாட வேண்டும்.

பொருளாதார மீட்சியின் தந்தையாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆளும் தரப்பினர் கருதுகிறார்கள்,ஆனால் நல்லாட்சி அரசாங்கமே சர்வதேச பிணைமுறிகள் சந்தையில் 76 சதவீத அடிப்படையில் 36 சதவீத கடனை பெற்று பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தியது என்பதை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினர் மறந்து விட்டார்கள்.

நல்லாட்சி அரசாங்கத்தின் பொருளாதார பாதிப்பு என்ற நோயை உருவாக்கிய ரணில் விக்கிரமசிங்க தற்போது அந்த நோயை குணப்படுத்தும் மருத்துவரை போல் செயற்பட்டு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுகிறார்.இதனை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

பொருளாதார பாதிப்பை தீவிரமடையும் போது வழிமுறைகளை ஏற்படுத்தி விட்டு அது எரிமலை போல் வெடித்ததன் பின்னர் 2021ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றார்.

பொருளாதார பாதிப்பு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியதன் பின்னர் கோட்டா கோ கம பாதுகாக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஆசுமாரசிங்கவே கோட்டாகோ கமவில் முதலாவது கூடாரத்தை அமைத்து அரசியல் பிரசாரங்களை முன்னெடுத்தார்.

பொருளாதார மறுசீரமைப்பு என குறிப்பிட்டுக் கொண்டு இலாபமடையும் அரச நிறுவனங்களின் பங்குகளை தனியார் மயப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

டெலிகொம் நிறுவனத்தின் பங்குகள் சுபாஸ்கரன் அல்லிராஜாவுக்கு வழங்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.நாட்டின் பொருளாதாரம்,தேசிய பாதுகாப்பு ஆகியவற்றை வெளிநாட்டு நிறுவனங்கள் தீர்மானிக்கும் நிலை ஏற்படும் என்றார்.