கால வரையறையின்றி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தது ஆணைக்குழு

82 0

கால வரையறையின்றி உள்ளுராட்சி மன்றத் தேர்தலை தேசிய தேர்தல் ஆணைக்குழு மீண்டும் ஒத்தி வைத்துள்ளது. தேர்தலை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னரே தினம் அறிவிக்கப்படும் என்றும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல் ஆணைக்குழுவில் இன்று (23) வியாழக்கிழமை இடம்பெற்ற நீண்ட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட 4 முக்கிய தீர்மானங்கள் தொடர்பில் தேர்தல் ஆணையாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாது என்பதால் , உறுதியான தினமொன்றை நியமித்து அதுவரை தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு ஆரம்பத்திலேயே தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்காது, தேர்தலை நடத்துவதற்கான வசதிகள் மற்றும் சூழல் தொடர்பில் சகல தரப்பினருடனும் கலந்துரையாடி இறுதியாக தினத்தை அறிவிப்பதற்கும் இதன் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்ட தினத்தில் நடத்துவது தொடர்பில் தற்போது நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டுள்ள இடைக்கால தடையுத்தரவின் அடிப்படையில் , தேர்தல் காலம் தாழ்த்தப்படுகின்றமை தொடர்பில் சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுகின்றமையால் எந்த வழியிலேனும்

தேர்தலை நடத்துவது தொடர்பில் நிறைவேற்றதிகாரம் , சட்டவாக்கசபை மற்றும் ஏனைய தரப்பினருடன் கலந்துரையாடி அதன் ஊடாக எட்டப்படும் இணக்கப்பாட்டுக்கமைய தேர்தலுக்கான புதிய தினம் தீர்மானிக்கப்படும்.

இவ்வனைத்து காரணிகளுடன் தேர்தலை நடத்துவதற்கான சட்டம் தொடர்பிலும் அவதானம் செலுத்தி, தேர்தலுக்கான தினத்தை இனிவரும் நாட்களில் ஆணைக்குழு தீர்மானிக்கும்.

அதற்கமைய ஏப்ரல் 25 ஆம் திகதி நடத்தப்படவிருந்து உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்கள் இம்மாதம் 28, 29, 30, 31 மற்றும் ஏப்ரல் 3ஆம் திகதிகளில் இடம்பெறாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.