பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண தேர்தல் நடத்தப்பட வேண்டும்

73 0

சர்வதேச நாணய நிதியம் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வல்ல. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையில் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்க வேண்டுமென எண்ணினால் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் புதன்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாணய நிதியத்துடன் எட்டப்பட்டுள்ள இணக்கப்பாடு காரணமாக மக்கள் நிம்மதியாக சுவாசிப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் இதன் மூலம் சகல பிரச்சினைகளுக்குமான தீர்வு கிடைக்கப்பெறவில்லை. நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் போது மக்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியேற்படும்.

சுமார் 2000 பில்லியன் ரூபாவுக்கும் அதிகக் கடனைக் கொண்ட நாட்டிற்கு 2.9 பில்லியன் டொலர்களை வழங்குவதால் தீர்வு கிடைக்கப் போவதில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உண்மையில் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்க வேண்டுமென எண்ணினால் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் அழகிய வேலைத்திட்டமல்ல. நாணய நிதியம் பிரச்சினைகளுக்கான ஒரு தீர்வு மாத்திரமேயாகும். எனவே சரியான பாதையில் பயணித்தால் மாத்திரமே இதன் பயனை முழுமையாகப் பெற்றுக் கொள்ள முடியும். எதிர்க்கட்சி என்ற ரிதீயில் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.