புலத்திலே கலைத்திறனோடு களமாடும் வளரிளம் தமிழர்கள்

385 0

தமிழ்க் கல்விக் கழகத்தால் ஆண்டுதோறும் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி இந்த ஆண்டிலும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. 19.02.2023ஆம் நாளன்று நடைபெற்ற வடமாநிலத் தமிழாலயங்களுக்கான போட்டியும், 04.03.2023ஆம் நாளன்று மத்திய மாநிலத்திற்கான போட்டியும், வடமத்திய மாநிலத்துக்கான போட்டி 05.03.2023ஆம் நாளன்று கற்றிங்கன் நகரத்திலும் நடைபெற்றதைத் தொடர்ந்து தென்மாநிலத்துக்கான போட்டி 11.03.2023அன்று ஸ்ருட்காட் நகரில் நடைபெற்றது.

தமிழர் கலைகளிற் தேர்வு செய்யப்பட்ட கலைகளுக்கான போட்டிகளோடு தமிழாலாய மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களென ஒருங்கிணைந்ததோடு, அரங்காற்றுவோரும் கலைச்சுவைஞர்களுமாக அரங்கும் மண்டபமும் தமிழர் கலைகளோடு ஒன்றித்திருந்தமை சிறப்பு. கலைத்திறன் போட்டியிலே துணிவோடும் ஆர்வத்தோடும் பங்கேற்றவர்களுக்கான மதிப்பளிப்பு ஒவ்வொரு அரங்காற்றுகை நிறைவிலும் வழங்கப்பட்டது.

9:00மணிக்கு மங்கலவிளக்கேற்றலோடு தொடங்கிய போட்டி, கலைத்திறனை வெளிப்படுத்தி முதல் மூன்றுநிலைகளைத் தமதாக்கிய வெற்றியாளருக்கான மதிப்பளிப்பைத் தொடர்ந்து நாளை எம் தேசம் விடியும் என்ற நம்பிக்கையோடு தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான கலைத்திறன் போட்டி நிறைவுற்றது.