செய்தியில் பொய்யை மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியுமா?

158 0

ஊடகங்களை கண்காணிக்க வேண்டுமாயின் காலையில் பத்திரிகை செய்திகள் ஊடாக பொய்களை   மாத்திரம் சமூகமயப்படுத்தும் ஊடகங்களையும் கண்காணிக்க வேண்டும்.

ஊடகங்களுடன் பிரச்சினைகள் காணப்படுமாயின் அதனை பாராளுமன்றத்திற்குள் தீர்த்துக் கொள்ள வேண்டும். நீதிமன்றம் வரை செல்வது அவசியமற்றது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்ற மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் பெற்றோலிய வளங்கள் சட்ட ஒழுங்குவிதிகள், நிதி,பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் ஒதுக்கீட்டு சட்ட கட்டளைகள் மற்றும் பாராளுமன்றம்,பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் மீறல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

சியத்த ஊடக நிறுவனத்தின் டெலிவெகிய நிகழ்ச்சி தொடர்பில்  எடுக்கப்படும் நடவடிக்கை பாரதூரமானது. நான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் திட்டமிட்டு என்னை ஊடகங்கள் விமர்சித்து செய்திகளை வெளியிட்டன. தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ள போதும்  பொய்யான செய்திகள் பல வெளியாகுகின்றன.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் ஊடாக ஊடகங்களுக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கினேன்,அது எனக்கு எதிராக அமைந்தது. என்னை விமர்சித்த போதும் நான் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் குறித்த நிகழ்ச்சி தொடர்பான விடயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாது பாராளுமன்றத்திற்குள் ஒரு தீர்வு எடுத்துக் கொள்ள வேண்டும்.

தெரிவு செய்யப்பட்ட ஊடக நிறுவனங்களை கண்காணிக்காமல் ஒட்டுமொத்த ஊடகங்களை கண்காணிக்க வேண்டுமாயின் காலையில் பத்திரிகை செய்தி வாசித்து பொய்யான கருத்துக்களை சமூக மயப்படுத்தும் நிறுவனங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,அரசாங்கத்திற்கு அது முடியுமா என்றார்.