சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பான பிரேரணை 32 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

178 0

பாராளுமன்ற உறுப்பினர்களதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் தொடர்பான பிரேரணை 32 மேலதிக வாக்குகளால் சபையில் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 43 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் இன்று (21) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல், பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மற்றும் ஒதுக்கீட்டு சட்டத்தின் கீழான தீர்மானங்கள்  பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

இதன்போது  விவாதத்தின் இறுதியில் பாராளுமன்ற உறுப்பினர்களதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் பிரேரணைக்கு எதிர்க்கட்சி பிரதமகொறட லக்ஷ்மன் கிரியெல்ல வாக்களிப்புக்கு செல்ல வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதன்போது சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் வாக்களிப்புக்கு செல்ல கோரம் மணியை ஒலிக்கவிடுமாறு உத்தரவிட்டார்.

அதன் பிரகாரம் இலத்திரனியல் முறையில் இடம்பெற்ற வாக்களிப்பில்  பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் தேசிய மக்கள் சக்தி, விமல் அணி பிரேரணைக்கு எதிராக வாக்களித்தது. அதேவேளை, எதிர்க்கட்சியில் சுயாதீன உறுப்பினராக செயற்படும் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார். தமிழ், முஸ்லிம் கட்சி உறுப்பினர்கள் யாரும் இதன்போது சபையில் ருக்கவில்லை.

வாக்களிப்பில் பிரேரணைக்கு ஆதரவாக 75 வாக்குகளும் எதிராக 43வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன் பிரகாரம் பாராளுமன்ற உறுப்பினர்களதும் பாராளுமன்றத்தினதும் சிறப்புரிமைகள் மீறப்படுதல் பிரேரணை 32மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக பிரதி சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.