நீதியரசர் குழாமை பாராளுமன்றக்குழுவில் விசாரிப்பது நாட்டின் நீதித்துறையை மேலும் பாராதீனப்படுத்தும்

122 0

உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்க மறுப்பதும், அதனை பாராளுமன்றக்குழுவில் விசாரணைக்கு உட்படுத்துவதும் ஏற்கனவே நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை ஆபத்தான நிலையிலுள்ள இலங்கைக்கு மிகமோசமானதொரு முன்மாதிரியாகவே அமையும் என்று சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு எச்சரித்துள்ளது.

அதுமாத்திரமன்றி உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவதற்கான நிதி வழங்கப்படுவதை உறுதிசெய்யும்வகையில் உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்குமாறு அந்த ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் சர்வதேச ஜுரர்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களுக்கான நிதியை விடுவிக்காமல் இருக்கும் செயற்பாட்டைத் தடுக்கும் வகையில் சட்டமா அதிபர் மற்றும் திறைசேரியின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக உயர்நீதிமன்ற நீதியரசர்களால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவு குறித்து பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழுவில் ஆராயவேண்டுமெனக் கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் தொலவத்தவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை மற்றும் நீதிமன்ற செயற்பாடுகளின்மீதான அநாவசியமானதும், பாரதூரமானதுமான அத்துமீறல் என்றே நாம் கருதுகின்றோம்.

நீதிமன்றமானது அதன் சொந்த அதிகார வரம்பு மற்றும் திறன்கள் என்பன உள்ளடங்கலாக நியாயத்துவ இயல்பைக்கொண்ட அனைத்து விவகாரங்கள் தொடர்பிலும் கேள்வியெழுப்பும் அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றது என்பதே சட்ட ஆட்சியின் அடிப்படைக்கோட்பாடாகும். எனவே உயர்நீதிமன்றம் அதன் அதிகார வரம்பெல்லைக்குள் செயற்பட்டிருக்கின்றதா என்பதை எந்தவொரு அரசியல்சார் தரப்புக்களாலும் தீர்மானிக்கமுடியாது.

அதேவேளை உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத்தடையுத்தரவு குறித்து பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பான குழு அதன் விசாரணைகளை முடிவுறுத்தும்வரை தேர்தலுடன் தொடர்புடைய எந்தவொரு செயற்பாடுகளையும் முன்னெடுக்கவேண்டாமென சம்பந்தப்பட்ட அனைத்துக் கட்டமைப்புக்களிடமும் வலியுறுத்துமாறு நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கடந்த 10 ஆம் திகதி பிரதி சபாநாயகரிடம் கோரிக்கைவிடுத்திருப்பது குறித்து எமது தீவிர கரிசனையை வெளிப்படுத்துகின்றோம். அதேவேளை உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு எவ்வித இடையூறுமின்ற உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்றும் வலியுறுத்துகின்றோம்.

உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்க மறுப்பதும், அதனை பாராளுமன்றக்குழுவில் விசாரணைக்கு உட்படுத்துவதும் ‘அதிகார வேறாகத்தை’ மீறுவதாக அமையும் அதேவேளை, ஏற்கனவே நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை ஆபத்தான நிலையிலுள்ள நாட்டுக்கு மிகமோசமான முன்மாதிரியாகவும் அமைந்துவிடும்.

எனவே உள்ளூராட்சிமன்றத்தேர்தல்களை நடாத்துவதற்கான நிதி வழங்கப்படுவதை உறுதிசெய்யும்வகையில் உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

அத்தோடு உயர்நீதிமன்ற நீதிபதிகளை பாராளுமன்ற சிறப்புரிமை தொடர்பான குழுவில் விசாரணைக்கு உட்படுத்துவதற்குத் தெரிவித்த இணக்கத்தை மீளப்பெற்றுக்கொள்ளுமாறு சபாநாயகரிடம் கோருகின்றோம் என்று அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.