அரசாங்கத்தில் எந்த பதவியையும் வகிக்கப் போவதில்லை!

70 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் நிலையான அமைச்சரவையை ஜனாதிபதி ஸ்தாபிக்காமல் இருப்பது குறித்து பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தான் எந்த பதவியையும் வகிக்கப் போவதில்லை. கட்சி என்ற ரீதியில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஷில் ராஜபக்ஷவுக்கும், பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெள்ளிக்கிழமை (17) பொதுஜன பெரமுன காரியாலயத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் தோற்றம் பெற ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளார்கள். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அரசாங்கத்தில் முன்னுரிமை வழங்கப்படவில்லை.

மாகாண சபைகளில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத நிலையில் மாகாண நிர்வாக கட்டமைப்பில் பாரிய சிக்கல்கள் தோற்றம் பெற்றுள்ளன.

ஆகவே, பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகள் வழங்காமல் இருப்பதால் பிரதேச மட்டத்தில் சேவைகளை முன்னெடுக்க முடியாமல் உள்ளது என பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பஷில் ராஜபக்ஷவிடம் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

நிலையான அமைச்சரவைக்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் 10 உறுப்பினர்களின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை தொடர்ந்து அமைச்சரவை மறுசீரமைக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

ஆகவே, நிலையான அமைச்சரவையில் பொதுஜன பெரமுனவுக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.