அனுமதியின்றி கட்டப்பட்ட சிலை தொடர்பில் வவுனியா ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சர்ச்சை

73 0

வவுனியா நகரில் அனுமதியின்றி கட்டப்பட்ட பத்மநாபாவின் சிலை தொடர்பில் கவனம் செலுத்திவிட்டு, நாளாந்த வாழ்வாதாரத்துக்காக வியாபாரம் செய்யும் வீதியோர வியாபாரிகளை அகற்றுங்கள் என மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (17) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் கு.திலீபன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், அங்கு மேலும் கூறுகையில்,

போராடிய தலைவர்களுக்கு சிலை வைப்பதை நான் எதிர்க்கவில்லை. ஆனால், முறையான அனுமதிகள் பின்பற்றப்பட்டதா என்பதே என்னுடைய கேள்வி.

குறிப்பாக, வவுனியா மாவட்டத்தில் முச்சக்கர வண்டியை வாழ்வாதாரமாக கொண்ட முச்சக்கர வண்டி சங்கத்துக்கு அலுவலகம் அமைக்கப்பட்டபோது முறையான அனுமதி பெறப்படவில்லை என தெரிவித்து, அந்த கட்டுமானப் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்டன.

நகரசபையானது நாளாந்த வாழ்வாதாரத்துக்காக வியாபாரம் செய்யும் வீதியோர வியாபாரிகள் மற்றும் தள்ளுவண்டி வியாபாரிகளை  குற்றவாளிகள் போல் நடத்தி, அவர்களது பொருட்களுக்கும் சேதம் விளைவித்து, அள்ளிச் செல்கிறது.

அவ்வாறு சட்டப்படி இயங்குவதாக இருந்தால் வவுனியா மணிக்கூட்டு கோபுர சந்தியில் பத்மநாபாவின் சிலை வைப்பதற்கு முறையான அனுமதி பெறப்பட்டதா?

நகரசபை செயலாளர் மற்றும் நகரசபையினர் என்ன செய்கின்றனர்? உள்ளூராட்சி திணைக்களம் என்ன செய்கிறது? இது தொடர்பாக பொலிஸாருக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரியப்படுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

ஆகவே, முறையற்ற விதத்தில் இந்த சிலை அமைக்கப்பட அனைவரும் ஒத்துழைத்துள்ளார்கள். ஆனால், அப்பாவி மக்களுக்கு எதிராக சட்டத்தை காவித் திரிகிறார்கள்.

இனிமேல் வவுனியா நகரில் வீதியோர வியாபாரிகளை நகரசபை அகற்றுவதாக இருந்தால், முதலில் முறையான அனுமதியின்றி அமைக்கப்பட்ட சிலையை அகற்றுங்கள்.

அதனை அகற்றாமல் விட்டால், வீதியோர வியாபாரிகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கக்கூடாது என தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம், பிரதேச செயலாளர் நா.கமலதாசன், உள்ளூராட்சி மன்ற பணிப்பாளர், திணைக்கள தலைவர்கள், நகரசபை செயலாளர், பிரதேச சபை செயலாளர், பொலிஸ் அதிகாரிகள், அரச உத்தியோகத்தர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.