பிரிட்டன் சந்தையை அணுகுவதற்கான இலங்கையின் வாய்ப்பு விஸ்தரிப்பு

76 0

பிரிட்டனால் வழங்கப்படும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையின் பல்துறைசார்ந்த வணிக நடவடிக்கைகள் பிரிட்டன் சந்தையை அணுகுவதற்கான வாய்ப்பு இலகுவாக்கப்படுமென இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் தெரிவித்துள்ளார்.

பிரிட்டனின் ‘அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக செயற்திட்டத்துக்கு’ இலங்கை தெரிவு செய்யப்பட்டிருப்பதாக உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் அறிவித்துள்ளார்.

‘அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக செயற்திட்டம்’ தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

‘வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற போதிலும், பிரிட்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படாத பல்வேறு உற்பத்திகள் இலங்கையில் உள்ளன.

விசேட மதிப்பாய்வின் மூலம் இதில் காணப்படும் குறைபாடுகளைக் கண்டறியமுடியும். அதன்படி புதிதாக வழங்கப்படவுள்ள அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கான வர்த்தக செயற்திட்டத்தின் முழுப்பயனையும் இலங்கை அடைந்துகொள்வதை உறுதிப்படுத்துவதில் பிரிட்டன் அவதானத்துடன் இருக்கின்றது’ என்றும் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாம் இச்செயற்திட்டத்தை மேலும் இலகுபடுத்தியுள்ளோம். குறிப்பாக பிரிட்டனின் வர்த்தக முன்னுரிமை நடைமுறையின் பிரகாரம் வருடாந்தம் இறக்குமதிச்செலவினங்கள் பெருமளவால் குறைக்கப்பட்டிருப்பது அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளின் வணிகங்களுக்கு வாய்ப்பாக அமையும்.

அதுமாத்திரமன்றி பிரிட்டனிலுள்ள நுகர்வோர் உணவு மற்றும் ஆடை போன்ற வீட்டுப்பாவனைப் பொருட்களை குறைந்த விலையில் பெற்றுக்கொள்வதற்கும் இது உதவும்’ என்று தெரிவித்துள்ளார்.