பன்றிக்காய்ச்சலால் இளம் தாய் உயிரிழப்பு

229 0

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பன்றிக்காய்ச்சலுக்கு இலக்காகி சிகிச்சைப் பெற்று வந்த இளம் தாயொருவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக, வைத்தியசாலை பணிப்பாளர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “​கெப்பற்றிக்கொலவ பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண், குழந்தை பிறந்து ஒருகிழமை கடந்த நிலையில், பன்றிக்காய்ச்சல் நோய்க்கு உள்ளாகி, கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர், புதன்கிழமை (01) உயிரிழந்துள்ளர்.

இதேவேளை, 37 வயதுடைய வவுனியா பூவரசம்குளம் பகுதியைச் சேர்ந்த பெண், பன்றிக்காய்ச்சல் நோய்த்தொற்றுக்கு உள்ளான நிலை‌யி‌ல், அதிதீவிர சிகிச்சைப்பிரில் சிகிச்சைப்பெற்று வருவதுடன், அவரது  உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இது தவிர, மேலும் ஐவர் பன்றிக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது” என்றார்.

“வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள பன்றிக்காய்ச்சல் தாக்கத்துக்கு உள்ளானவர்களை பார்வையிடுவதற்கு வருகை தரும் போது, கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் சிறுவர்களை வைத்தியசாலைக்கு அழைத்து வரவேண்டாம்” எனவும் அவர்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.