விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் யாழ். வைத்தியசாலையில் உயிரிழப்பு

427 0

30கிலோகிராம் கஞ்சா கடத்தியக் குற்றச்சாட்டில், கடந்த 18மாதங்களாக சிறையில் வைக்கப்பட்டிருந்த நபர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

தொண்டமனாறு வல்வெட்டித்துறை பகுதியினைச் சேர்ந்த 61 வயதுடைய என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு 30கிலோகிராம் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் மேற்படி நபர், சாவகச்சேரி மதுவரி நிலைய அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

எனினும், கடந்த வருட இறுதியில் மேற்படி நபரை யாழ். மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதியளித்திருந்தது. பிணை எடுப்பதற்கு யாரும் முன்வராத நிலையில், முதியவர் தொடர்ந்தும் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் இருந்து வந்துள்ளார்.

நேற்றையதினம் (01) திடிர் நெஞ்சுவலியினால் பாதிக்கப்பட்ட நபரை சிறைச்சாலை அதிகாரிகள், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். இறப்பு விசாரணைகளை யாழ். போதனா வைத்தியசாலையின் திடிர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்கள் பொறுப்பேற்றனர்.