வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் கடந்த காலப்பகுதியில் எம்மால் அடிக்கல் நடப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் சிலவற்றுக்கும் தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கும் மதிப்பளித்து, தற்போது திறப்பு விழாக்களை நடத்த முடியாதுள்ள போதும் அத்திட்டங்கள் பின்னரான திகதியில் மக்கள்மயப்படுத்தப்படும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
புத்தூரில் 15 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட மீன்சந்தை கட்டுமானம் தற்போது பூர்த்திசெய்யப்பட்டு திறந்துவைக்கப்படும் நிலையில் உள்ளது.
இதற்கு மேலதிகமாக அங்கு 20 மில்லியன்கள் ஒதுக்கப்பட்டு மரக்கறிச் சந்தை மற்றும் இறைச்சி கடைத் தொகுதிக்கான ஆரம்பகட்ட பணிகள் இடம்பெறுகின்றன.
அதேபோன்று நீர்வேலியில் வலிகாமம் கிழக்குக்கான பொது சிறுவர் பூங்காவுக்குரிய வேலைகள் நிறைவடையும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில் நீர்வேலி கந்தசாமி தேவஸ்தானத்தினால் வழங்கப்பட்ட நிலத்தில் கட்டுமானப் பணிகள் 3.4 மில்லியன் செலவில் பணிகளை தற்போது பூர்த்தி செய்துள்ளோம். அப்பூங்காவுக்குரிய விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளன.
மேலும், பிரதேச சபையின் கோப்பாய் உப அலுவலகத்துக்காக 7 மில்லியன் சபை நிதியில் எம்மால் கொள்வனவு செய்யப்பட்ட காணி கட்டடத்தில் 7 மில்லியன்களுக்கு மேலதிகமாக செலவிடப்பட்டு, மேலதிக அலுவலக வசதிப்படுத்தல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
ஏற்கனவே அச்சுவேலி சந்தையில் மரக்கறிச் சந்தை அமைக்கப்பட்டு, திறந்துவைக்கப்பட்ட நிலையில் தற்போது 9 மில்லியன்கள் செலவில் அமைக்கப்பட்ட மீன்சந்தை கட்டுமான வேலைகளும் பூர்த்தியடைந்துள்ளன.
இத்திட்டங்கள் யாவும் வலிகாமம் கிழக்கு பிரதேச மக்களின் வரிப்பணம், சோலை வரி, தண்டப்பணம், சர்வதேச மானிய உதவிகள் என பல்வேறுபட்ட நிதி மூலங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகளாகும். இவற்றை நாம் தேர்தல்களின் பின் கடந்த 13ஆம் திகதி மக்கள்மயப்படுத்த சபையில் தீர்மானித்திருந்தோம். அதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆலோசனைகளையும் பெற்றிருந்தோம்.
எனினும், தேர்தல்கள் கடந்த 9ஆம் திகதி நடைபெறாமல் மீளவும் ஒத்திவைக்கப்பட்டு, வர்த்தமானி அறிவித்தல் வெளியானதால் தேர்தல் ஒழுங்குகளுக்கமைய திட்டங்களை மக்கள்மயப்படுத்தவில்லை.
எனவே, பின்னர் ஒரு திகதியில் மேற்படி திட்டங்கள் மக்கள்மயப்படுத்தப்படும் என வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார்.