ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தை போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்

106 0

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தை போன்று தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஸ்கொட்லாந்தில்  வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்துக்கு விஜயம் செய்துள்ளது.

வெஸ்மினிஸ்டர் பவுண்டேஷன் ஒஃப் டெமோக்ரஸி என்ற அமைப்பின் அனுசரணையில் இக்குழுவினர் ஸ்கொட்லாந்துக்கு சென்றுள்ளனர்.

அங்கே நாடாளுமன்ற குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் ஸ்கொட்லாந்து நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும், அதனூடாக இலங்கை பாராளுமன்றம் எவ்வாறான பாடங்களை கற்றுக்கொள்ள முடியும் என்பது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கை அரசியல் பிரமுகர்களையும், அரசியலில் ஈடுபாடுள்ள தரப்பினரையும் சந்தித்த ஸ்கொட்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் கென்னத் ஜே கிப்சனை (Kenneth J Gipson) இம்முறை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனியாக சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது அவர், கடந்த 2001ஆம் ஆண்டு இலங்கையில் இருந்ததை போன்றதொரு நிலைமையினையே தமிழ் மக்கள் தற்போது எதிர்கொண்டுள்ளார்கள் என கிப்சனிடம் தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தை போன்று இலங்கையில் தமிழ் மக்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

சாணக்கியனின் இந்த கருத்துக்கு பதிலளித்த கிப்சன், எதிர்காலத்தில் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் இலங்கை தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசவுள்ளதாக சாணக்கியனிடம் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

அத்துடன், இலங்கைக்கு விஜயம் செய்யும்போது தான் தமிழ் தரப்பினரை சந்தித்து பேசவுள்ளதாகவும் அவர் சாணக்கியனிடம் தெரிவித்துள்ளார்.