தேர்தலை நடத்தினால் நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும்

99 0

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை செயற்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும், மீண்டும் அத்தியாவசிய சேவை விநியோகத்தில் நெருக்கடி நிலை தோற்றம் பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான ஒரு ஏணியாக சர்வதேச நாணய நிதியம் காணப்படுகிறது.பாரிய போராட்டத்தை தொடர்ந்து கடன் மறுசீரமைப்பு விவகாரம் வெற்றிப் பெற்றுள்ளது.பொருளாதார மீட்சிக்கான ஒத்துழைப்பை வழங்குவதாக சீனா,இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய முதனிலை கடன் வழங்குநர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் இம்மாத இறுதிக்குள் கைச்சாத்திடப்படும். நாணய நிதியத்திடமிருந்து நான்கு ஆண்டு காலத்திற்கு 8 தவணை அடிப்படையில்  3 பில்லியன் டொலர் கிடைக்கப் பெறவுள்ளது அத்துடன் நாணய நிதியத்தில் உத்தரவாதத்தை அடிப்படையாகக் கொண்டு உலக வங்கி,மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உட்பட சர்வதேச நிதி நிறுவனங்களின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள முடியும்.

நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்து,நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ளது. ஆகவே பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் என்ற ரீதியில் முன்னுரிமை வழங்க வேண்டும்.பொருளாதார மீட்சிக்காக முன்னெடுத்த கடுமையான தீர்மானங்களால் நாடு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை தற்போது நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நடைமுறைப்படுத்துவதில் பாதிப்பு ஏற்படும்,மீண்டும் அத்தியாவசிய சேவை விநியோக கட்டமைப்பில் நெருக்கடி ஏற்படும். ஆகவே பொருளாதாரத்தை முன்னிலைப்படுத்தி செயற்படுத்த வேண்டிய தேவை காணப்படுகிறது என்றார்.