பாராளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும் இடையில் முரண்பாடுகளை தோற்றுவிப்பது ஏற்புடையதல்ல!

83 0

பாராளுமன்ற  உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிடும் ஆளும் தரப்பினர் நாட்டு மக்களின் சிறப்புரிமையை  மீறியுள்ளமை பாரதூரமான விடயமாகும்.

பாராளுமன்றத்திற்கும் நீதிமன்றத்திற்கும்  இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் ஜனாதிபதி செயற்படுவது வெறுக்கத்தக்கது என பாராளுமன்ற உறுப்பினர் இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இடதுசாரி ஜனநாயக முன்னணியின் காரியாலயத்தில் சனிக்கிழமை (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் எதிர்வரும் மாதம் 25 ஆம் திகதி நடத்தப்படுமா என்ற சந்தேகம் தற்போது தோற்றம் பெற்றுள்ளது.

தேர்தலை நடத்துவது தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் பாரிய தடைகளை ஏற்படுத்துகிறது.

தடைகளை உயர்நீதிமன்றம் நீக்கும் போது ஆளும் தரப்பினர் பாராளுமன்ற சிறப்புரிமை என்பதை குறிப்பிட்டுக் கொண்டு உயர் நீதிமன்றத்தின் இடைக்கால தடையுத்தரவை தற்போது சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகளுக்கான நிதி விடுவிப்பை திறைசேரி இடைநிறுத்தியுள்ளதை தடுக்கும் வகையில் உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடையுத்தரவை ஆளும் தரப்பினர் தற்போது சவாலுக்கு உட்படுத்தியுள்ளார்கள்.

பாராளுமன்ற சிறப்புரிமை குழு இந்த விவகாரம் தொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கும் வரை இடைக்கால தடையுத்தரவை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்தும் அறிவித்தல் ஒன்றை பிறப்பிக்குமாறு ஆளும் தரப்பின் உறுப்பினர், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க பாராளுமன்ற சிறப்புரிமைகள் தொடர்பான குழுவிடம் வலியுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் வாக்கெடுப்பை தடுக்கும் வகையில் தான் இந்த சிறப்புரிமை மீறல் பிரச்சினை முன்வைக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக குறிப்பிடும் ஆளும் தரப்பினர் நாட்டு மக்களின் வாக்குரிமை என்ற சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதை ஏன் கவனத்தில் கொள்ளவில்லை.

பாராளுமன்ற சிறப்புரிமை என்பதை குறிப்பிட்டுக் கொண்டு சட்டவாக்கத்துக்கும் , நீதித்துறைக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்கும் வகையில் நிறைவேற்றுத்துறை தற்போது செயற்படுகிறது.நாட்டில் சுதந்திரமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.