இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக விரைவில் பாரிய போராட்டம்!

222 0

இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம் விரைவில் நடத்தவுள்ளதாக வடக்கு மாகாண மீனவ சங்க பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண மீனவர் சார் பிரச்சினைகள் குறித்து வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்திஜீவிகளுடான கலந்துரையாடல் ஒன்று யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் தலைமையில் யாழில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் (04.03.2023) இடம்பெற்றுள்ளது.

இதன்போது வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.

மேலும், இந்திய மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பதற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்றை நடத்தி ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றைக் கையளிப்பதற்கும் தீர்மானித்துள்ளனர்.

போராட்டம் நடைபெறவுள்ள திகதி தொடர்பில் மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடி விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் சிறீதரன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தவிர்ந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற அனைவருக்கும் அழைப்பு விடுத்த போதும் விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.