மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டாலும் இராணுவமுகாம் அகற்றப்படாது – இராணுவம்!

271 0

கேப்பாப்புலவில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டாலும் அங்கிருக்கும் இராணுவ முகாம்கள் எவையும் அகற்றப்படாது என சிறீலங்கா இராணுவம் அறிவித்துள்ளது.

வலிகாமம் வடக்கில் எவ்வாறு பலாலி படைத்தளத்திற்குள் மக்கள் மீள் குடியேற்ற அனுமதிக்கப்பட்டனரோ, அவ்வாறே பிலவுக் குடியிருப்பிலும் மக்கள் அனுமதிக்கப்படுவர் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.

கடந்த 31ஆம் நாளிலிருந்து இராணுவத்தினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு பிலவுக் குடியிருப்பு மக்கள் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில், இன்றைய தினம் விமானப்படையினர் வசமிருந்த பிலவுக்குடியிருப்பு மக்களின் ஒரு தொகுதி காணிகள் விடுவிக்கப்பட்டது.

இது தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்றைய தினம் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

அன்றும் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டபோது இதே பதிலைத்தான் வழங்கியிருந்தேன். இராணுவ முகாம்கள் அங்கிருந்து அகற்றப்படமாட்டாது. இங்கு விமானப்படை முகாம் விமான ஓடுபாதையும் உண்டு. பலாலி இராணுவ முகாம்பகுதியில் மக்கள் எவ்வாறு குடியமர்ந்துள்ளார்களோ அவ்வாறே இப்பகுதியிலும் மீளக்குடியமர்வார்கள். இப்பிரதேச மக்களின் காணிகள் இன்று கையளிக்கப்படுவதற்கான நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.