ரணில் விக்ரமசிங்க தன்னுடைய அடி மனதில் இருக்கின்ற பயங்கரவாத தோற்றத்தை வெளிக்காட்டி மக்களின் உரிமைகளை தடுத்து வருவது மிக மோசமானது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இன்று இடம்பெறுகின்ற நிழ்வுகளிற்கு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கதான் முதன்மை காரணராக இருக்கின்றார்.
குறிப்பாக 1994ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலை யாழ். மாவட்டத்திற்கான தீவகத்திற்குள் முடக்கி, அத்தேர்தலில் மற்றவர்களை வாக்களிக்க விடாத பங்கும் அவரை சார்ந்தது. அதற்கு பிற்பாடு வந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா , வவுனியாவில் கொத்தனி வாக்குகள் மூலம் தேர்தலை நடத்தியிருந்தார்.
ஆனால், தன்னை ஒரு ஜனநாயகவாதியாக இந்த உலகம் முழுவதும் காட்டிக்கொண்டிருக்கின்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வாதிகாரியாக செயற்படுவதை நாங்கள் அவதானிக்கின்றோம்.
மிக முக்கியமாக நாடாளுமன்றத்தில் ஒரு கோமாளிகளின் தலைவனாகவும், வெளியிலே ஜனநாயக சர்வாதியாகவும் தன்னுடைய அராஜகத்தனத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தி வருவதை அவதானிக்க முடிகின்றது என தெரிவித்துள்ளார்

